பாஜகவை விரட்டும்வரை தூங்க மாட்டோம்: உதயநிதி
பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்டும் வரை தூங்க மாட்டோம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வில்லியனூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்தமுறை ஒரே அணியாக இருந்த எதிரிகள், இம்முறை பிரிந்து வருகின்றனர். வாக்கு இயந்திரத்தில் நீங்கள் வைக்கும் ஓட்டு தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு வைக்கும் வேட்டு. 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கத்தை வெற்றி பெறச் செய்வோம்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராக ஆனார். எடப்பாடி பழனிசாமி போன்று தவழ்ந்து சென்று கால் பிடித்து முதல்வராகவில்லை. கரோனா நெருக்கடியில் பெரும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் திமுக ஆட்சி அமைத்தது. ஆட்சி பொறுப்பேற்ற ஒரே நாளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் உள்ளிட்ட 5 கையெழுத்துக்களை முதல்வர் போட்டார்.
திமுகவினருக்கும், முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டதாக பிரதமர் மோடி சொல்கிறார். உண்மைதான். பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம் என உதயநிதி பேசினார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, சுவர் இடிந்து உயிரிழந்த 5 பேருக்கு இரங்கல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.