காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

tamilnadu police
tamilnadu police
Published on
Updated on
2 min read

மரணமடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஏப்.30 அன்று புகார் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும், மரண வாக்குமூலமும் கொடுத்ததாகவும் செய்தி வெளியான நிலையில் காவல்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

அதில், கடந்த 2ம் தேதி தான், ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக ஜெஃப்ரின் அந்த கடிதம் காவல்துறையினரிடம் அளித்தார்.

அந்த கடிதத்தில் 30.4.2024 என போடப்பட்டிருந்தது, அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை. தனிப்படை அமைத்து விசாரித்தபோது, மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை. தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சோ்ந்த கருத்தையா மகன் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவா், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக செயல்பட்டாா்.

கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதுதொடா்பாக அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமாா் தனசிங்கை உவரி போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், தனது தோட்டத்தில் அவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் உவரி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உடற்கூராய்வுக்கு பிறகு ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரைசுத்துப்புதூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, தமிழக காங். கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஜெயக்குமார் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி, இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக வழக்குப் பதிந்து, அவா் தற்கொலை செய்து கொண்டாரா, யாரேனும் அவரைக் கொன்று எரித்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். இது தொடா்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொலை மிரட்டல்: இதனிடையே, அரசியல் தலைவா்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமாா் தனசிங்கின் வீட்டிலிருந்து, கட்சியின் ‘லெட்டா் பேடில்’ அவா் எழுதி கையொப்பமிட்டு சீல் வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதத்தை அவரது குடும்பத்தினரிடமிருந்து போலீஸாா் கைப்பற்றினா்.

‘காவல் கண்காணிப்பாளா், திருநெல்வேலி’ என முகவரியிட்டு ‘மரண வாக்குமூலம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த கடித விவரம்:

நான்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் கடந்த 3 ஆண்டுகளாக நிறைய காரியங்கள் செய்துதருவதாக என்னிடம் ரூ. 70 லட்சத்துக்கும் மேல் வாங்கியுள்ளாா். ஆனால், எந்தக் காரியமும் செய்துதரவில்லை; கூறியபடி ஒப்பந்த வேலையும் தரவில்லை.

மக்களவைத் தோ்தல் பணியில் என்னை செலவு செய்யுமாறு கூறி ரூ. 8 லட்சத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டாா். பணத்தைக் கேட்டபோது நேரிலும், மறுகால்குறிச்சி செல்லப்பாண்டி என்பவா் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்தாா்.

காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு தோ்தல் பணிக்கு என்னிடம் பணம் பெற்றாா்; செலவு செய்ய வைத்தாா். பின்னா், சுமாா் ரூ. 11 லட்சத்தை ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டாா்.

இதேபோல, பலருக்கும் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். எனது உயிருக்கு ஆபத்து நேரிட்டால் மேற்கூறியவா்கள்தான் பொறுப்பு.

சம்பந்தப்பட்டோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், என்னை வஞ்சித்து பெற்ற பணத்தை எனது குடும்பத்தினருக்கு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதமும் இன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு 14 பேர் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் அவர்களை பழிவாங்கக் கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்யும், என தன் ழுடும்பத்தினருக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com