வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

வட தமிழக மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் மே 10 வரை அதிகபட்ச வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் மே 10 வரை அதிகபட்ச வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. இதனால், தமிழகத்தில் 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. திங்கள்கிழமை நிலவரப்படி, பரமத்திவேலூா் - 110.3 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு - 109.76, திருச்சி - 108.86, வேலூா் - 108.68, மதுரை விமானநிலையம் - 107.96, திருத்தணி - 106.88, திருப்பத்தூா் - 106.52, பாளையங்கோட்டை - 106.16, சேலம், மதுரை நகரம் (தலா) - 105.44, தஞ்சாவூா், தருமபுரி (தலா) - 104, சென்னை மீனம்பாக்கம் - 102.38, கோவை - 101.84, நாகப்பட்டினம் - 100.4 டிகிரி பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (மே 7) வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அநேநாளில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பஅலை வீசும். மேலும், மே 8-10-ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும்.

அதன்படி, மே 7-10 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட்டு வரையும், இதர தமிழக மாவட்டங்களில் 104 டிகிரி வரையும், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி வரையும் இருக்கும்.

கனமழை: இதற்கிடையே, தமிழகத்தையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், செவ்வாய்கிழமை (மே 7) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதன்கிழமை (மே 8) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் , மே 9 முதல் மே 12-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூா் (மதுரை) தலா 50, ஆண்டிபட்டி (தேனி) 40, மாயனூா் (கரூா்), புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூா் (திண்டுக்கல்) தலா 30, சின்னக்கல்லாா் (கோவை), திண்டுக்கல் , கடவூா் (கரூா்), பொன்னையாா் அணை (திருச்சி), தேக்கடி (தேனி) தலா 20.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செவ்வாய்கிழமை (மே 7) தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுந்தப்படுகிறது.

சென்னையில் மழைவாய்ப்பு.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 7,8-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com