தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இன்று தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டு முக்கிய விவரங்களை வெளியிட்டார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகமாகும்.
தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் 2478 பள்ளிகள் நூறு சதவீதம் தேரச்சி பெற்றுள்ளனர். இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதளம் தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம், கைப்பேசி வழியாகவும், பள்ளிகள், தகவல் மையங்கள் வாயிலாகவும் தடையின்றி முடிவுகளை அறிந்து கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்திருந்தது.
www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் முலம் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். மேலும், பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏராளமான மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளில் குவிந்தனர். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.