சென்னை: ஏற்கனவே தமிழகத்தை கோடை வெப்பம் வாட்டி வதக்கிவந்த நிலையில், கத்திரி எனப்படும் அக்னி வெயில் தொடங்கியபோது மக்களுக்கு கலக்கம் அதிகரித்திருந்தது.
ஆனால், கத்திரி வெயில் தொடங்கவும், வருண பகவான் தமிழக மக்கள் மீது கருணையைப் பொழியவும் சரியாக இருக்கவே, ஆங்காங்கே கோடை மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது.
சென்னையில் மழை என்று பெய்யாவிட்டாலும் வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன், ஒரு சில இடங்களில் மழைத் தூறலுடன் பூமியை தொட்ட மழைத்துளியால் மண் வாசனையுடன் சென்னை மக்களின் மனங்களை குளிரவைத்துள்ளது.
இந்த நிலையில்தான், இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் மே 9 முதல் 14ஆம் தேதி வரை சில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இன்று முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாள்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
வியாழக்கிழமை சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இதனால், அதிகபட்ச வெப்பநிலையானது 35 - 36 டிகிரி செல்சியஸ் வரையில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.