கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த மூன்று மாதகாலமாக மழை பெய்யவில்லை.இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் என்ற கத்தரி வெயில் காலம் தொடங்கியது, இந்த வெயில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகம் இருந்தாலும், தென்மாவட்டங்களுக்கு மழை கொடுக்கும்.
அதன் காரணமாக மே 5 முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை சிறிதாக பெய்து வந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை அதுவும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
பெரியாறு அணை பகுதியில் 54.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 6.8 மி.மீ., மழையும் பெய்தது. இதன் காரணமாக அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 293.87 கன அடி வந்தது, அணையின் இரச்சல் பாலம் வழியாக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.
அணையின் போர்பை டேம் மூலமாக தண்ணீர் திறக்கப்படாததால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செயல்படவில்லை.
அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.95 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 1,718 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 293.87 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது.