நெல்லையில் போலியோவால் இரண்டு கால்கள் மற்றும் கைகள் செயல் இழந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர், பொதுத் தேர்வில் 500க்கு 420 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஊனம் ஒரு தடை இல்லை என்பதை அவரைப் போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், படிக்கும் வசதி இருந்தும் படிக்காமல் வீணடிக்கும் மாணவர்களுக்கும் நிரூபித்து, தன்னம்பிக்கை மிக்க மாணவராக விளங்குகிறார் தமிழ்ச்செல்வன்.
நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனியார் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாப்பம்மாள். இவர்களுடைய மகன் தமிழ்ச்செல்வன். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
இதுகுறித்து அவனுடைய தாயும் தந்தையும் தெரிவிக்கும் போது அவனால் சுயமாக எந்த வேலையும் செய்ய முடியாது. நான் சொல்ல சொல்ல தான் அவரால் எதையும் செய்ய முடியும். அப்படி இருக்கும் மாணவர் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுப்பதாகவும் அவர் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாணவர் தெரிவிக்கும் போது நான் நன்றாக படித்ததினால் இந்த மதிப்பெண் என்னால் எடுக்க முடிந்தது. அரசு எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். நான் படித்து வழக்கறிஞராக வேண்டும் என்றும் என்னைப் போல் உள்ள மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த மாணவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
சிறு வயதில் போலியோவால் தனது இரண்டு கைகளையும் கால்களையும் இழந்த இந்த மாணவர் சுயமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் தான் இருந்து வருகிறார். இருந்தாலும் இவரை எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று இவரது தாயும் தந்தையும் அதிக முயற்சி எடுத்து வந்தனர்.
அதன் முன்னேற்றமாக பத்தாம் வகுப்பில் தமிழ்ச்செல்வன் 500க்கு 420 மதிப்பெண் எடுத்து தான் ஒரு தன்னம்பிக்கை மிக்க மாணவர் என்பதை நிரூபித்து உள்ளார்.