
புழல் முதல் பெருங்களத்தூர் வரையிலான சென்னை புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்கும் முடிவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் காரணமாக, இருசக்கர வாகனங்களுக்கு என தனி வழி அமைக்கப்பட்டுவிட்டால், அதில் வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில் செல்லும் அபாயம் இருப்பதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, சாலை அமைக்கும் பணியின் ஆரம்பத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு என தனி வழி அமைக்க திட்டமிடப்பட்டது. மூன்று வழிச் சாலையிலும் இரு சக்கர வாகனங்கள் பயணிப்பதால், அவ்வப்போது விபத்துகள் நேரிடுகின்றன. அதனைத் தவிர்க்கவே தனிவழி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், தனிவழியில், இருசக்கர வாகன ஓட்டிகள் பொறுப்பில்லாமல், அதிக வேகம், கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் அபாயம் இருந்ததால், இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு, இருசக்கர வாகனங்களுக்கான தனி வழியில், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.
இப்பாதையில், அவ்வப்போது இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்திருந்தது. எனவேதான் நெடுஞ்சாலைத் துறை தனி வழி அமைக்கும் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது. அதாவது, இரண்டு சாலைகளுக்கும் இடையிலிருக்கும் சாலைத் தடுப்பானை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த சென்னை புறவழிச்சாலையில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 170 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன ஓட்டிகள்.
இந்த நெடுஞ்சாலையை ஒட்டி அதிக குடியிருப்புகள் வந்ததாலும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுமே இதற்குக் காரணம். இந்த நிலையில்தான் இரு சக்கர வாகனங்களுக்கு தனி வழி என்பது திட்டமிடப்பட்டது. ஆனால், ஆரம்பக்கட்டத்திலேயே அதற்கு தடை ஏற்பட்டுவிட்டது என்கிறது தகவல்கள்.
மதுரவாயல் - தாம்பரம் இடையிலான 18 கிலோ மீட்டர் பாதைக்கு நடுவே எங்குமே வெளியேறும் வழிகள் இல்லை. எனவே, அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் மிகப்பெரிய அபாயங்கள் ஏற்படலாம் என்கிறார்கள் இறுதியாக.
2009ஆம் ஆண்டு முதல் சென்னை புறவழிச்சாலை இயங்கி வருகிறது. இங்கு போதுமான நிறுத்தங்கள் இல்லாததால், இதில் மாநகரப் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது. ஆறுவழிப்பாதைகளைக் கொண்ட நெடுஞ்சாலை சாலை முழுக்க முழுக்க இருபுறங்களிலும் வேலிகளுடன் உள்ளது, போரூர் சுங்கச்சாவடியைத் தவிர்த்து. கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்திருப்பதால் இங்கு இடதுப் பக்க சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல போதுமான வசதி இல்லை என்பதே வாகன ஓட்டிகளின் புகார்.
இதனால்தான் பலரும் புறவழிச் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். இதில் முக்கிய சாலையில் கார்கள், டிரக் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 32 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட புறவழிச்சாலையில் நாள்தோறும் 55 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலையிலிருந்து வெளியேறும் வழிகள் அம்பத்தூர், பட்ரவாக்கம், மதுரவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.