

பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டக் காவல் துறையில் முசிறி டிஎஸ்பி-யாக பணிபுரியும் யாஸ்மின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரிடம் அளித்த புகாரில் சவுக்கு சங்கருடன் மற்றொரு யூ-டியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டும் சோ்க்கப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் புதுதில்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.
தனது கணவா் எங்கிருக்கிறாா் என்பதே தெரியவில்லை எனக் கூறி திருச்சி மாவட்டக் காவல் துறையிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி புகாா் அளித்திருந்த சூழலில், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டக் காவல்துறையினா் கணினிசாா் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் (சைபா் கிரைம்) பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னா் அவா் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இந்த நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டினுக்கு நிபந்தனை ஜாமீனை திருச்சி மகிளா நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும், பெலிக்ஸ் ஜெரால்டு 6 மாதத்திற்கு திருச்சி கணிணிசார் குற்றப்பிரிவில் மாதம் 2 முறை கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டு மீது 6 வழக்குகள் உள்ள நிலையில் திருச்சி கணினிசாா் குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.