![டாஸ்மாக்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2020%2F6%2F26%2Foriginal%2Ftasmac.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை: தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 26.55 சதவீதம் அதிகமாக விற்பனையாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக மாநில அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம், கடந்த மே மாதத்தில் 1 முதல் 19ஆம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளை விற்பனை செய்துள்ளது. ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் விற்பனையான பீர் பெட்டிகளின் எண்ணிக்கை 18,70,289. எனவே, இது 26.55 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்திலேயே பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து சேலமும், திருப்பூர் மூன்றாம் இடத்திலும் திருவள்ளூர் நான்காம் இடத்திலும் உள்ளது.
இது குறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி கூறுகையில், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் 24 வகையான பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதில் ஐந்து பீர் வகைகளை நிறுத்திவிட்டு, புதிதாக மூன்று வகைகளை சேர்த்தோம். புதிய பீர் வகையில் ஒன்று 100 சதவீதம் மால்ட் கொண்டு தயாரிப்பது, இதற்கு மாநிலம் முழுவதும் மதுப்பிரியர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு. தற்போது டாஸ்மாக் கடைகளில் 22 வகையான பீர் வகைகள் விற்பனையாகி வருகிறது. கோடையில் பீர் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது, எங்கும் பீர் இல்லை என்ற நிலை உருவாகாமல், தொடர்ச்சியாக பீர் விநியோகம் செய்யப்பட்டது என்றார்.
தொடர்ச்சியாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 23 லட்சம் பீர் பெட்டிகள் மாதந்தோறும் விற்பனையாகி வந்தது. புதிதாக சில வகை பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதுவரை புதிய பீர் வகைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காததால், அவை விற்பனைக்கு வரவில்லை.
அதேவேளையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு ஸ்ப்ரைட் வகை மதுவுக்கான மவுசு குறைந்து வருகிறது என்கிறார்கள்.