பாரதிய ஜனதா கட்சி தனித்துப் பெறும் வாக்குகளைவிடக் குறைந்த வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றால் தம் கட்சியைக் கலைத்துவிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளில் சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சீமான்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழர்களை திருடர்கள் போல் சித்திரித்துப் பேசுகிறார் பிரதமர் மோடி. இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு முன்னர் பேசியிருக்க வேண்டியதுதானே? என வினவினார்.
தென் மாநிலங்களில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து பற்றிக் கேட்டபோது, ஜூன் 4 -ஆம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் கூட்டணிக் கட்சிகளோடு அல்லாமல் பாஜக தனித்து பெறப் போகும் வாக்குகள் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளைவிடக் கூடுதலாக இருந்தால், நான் கட்சியைக் கலைத்துவிட்டுச் செல்கிறேன் என்றார் சீமான்.