நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் அரங்கேறும் கொடூரம் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படம் நடத்தும் ஆசிரியர் காலணியை எடுத்து மாணவிகள் மீது வீசி தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்கள்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக,தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்கம் முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் காளான்கள் போல முளைத்துள்ளன.
இந்த நிலையில் கேரளத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி உள்ளார்,
இந்த பயிற்சி மையத்தில் படித்து மாணவர்கள் 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும் அதிக அளவு மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண் - பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வந்துள்ளதாகவும் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
எப்படியாவது மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தினம் தினம் தேர்வு, 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு மன அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.
இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிறம்பால்(கம்பால்) சரமாரியாக தாக்கி உள்ளார்,
இதனால் மாணவர்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்தப் பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால் இந்த பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலனியை விட்டு விட்டு வர வேண்டும் அதற்கென பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து இந்த காலனி யாருடையது என ஆசிரியர் கேட்டு என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன் அந்த மாணவி மீது தூக்கி வீசுவது போன்று அந்த காலனி சக மாணவிகள் மீது விழுவது போன்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது.
மேலும்,மாணவர்களை தாக்குதல் அவதூறாக பேசுதல், காலணி கொண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி விடியோ காட்சிகள் மற்றும் காலணியை மாணவி மீது வீசுவது போன்ற விடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறை சிஎஸ்ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர் பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் இது தொடர்பாக புகார் சென்ற நிலையில் அவர்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனியார் பயிற்சி மையத்தில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டதற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பயிற்சி மையத்திற்கு அனுப்புவதாகவும் மாணவர்கள் அலட்சியமாக தூங்கியதன் காரணமாகவே அவர்களை பிறம்பால்(கம்பால்) தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், மாணவிகளை திட்டமிட்டு காலணியால் தாக்கவில்லை என்றும் எதிர்பாராத விதமாக காலணி மாணவிகளின் மீது பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.