திமுக பவள விழா இலச்சினை: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்
அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
அண்ணாவால் 17.9.1949-இல் தொடங்கப்பட்ட இயக்கம் திமுக. இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக மக்களுக்காக செயல்பட்டு பவள விழாவைக் கொண்டாடி வருகிறது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, புதுக்கொடிகள் ஏற்றப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக தலைமைக் கழகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் திமுக பவளவிழா இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.
பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் உருவங்களுடன் உதயசூரியனில் 75 என்ற எண் இடம்பெறும் வகையில் இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நாளை பவள விழா: திமுக பவள விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப். 17 மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தலைமை வகிக்கவுள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கவுள்ளாா்.

