
சிதம்பரத்திலிருந்தது செப்டம்பர் 1ஆம் தேதி உத்தரகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பேர் அடங்கிய குழுவினர் உத்தரகண்ட்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற நிலையில், ஆதி கைலாஷ் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேரும் சிக்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் சென்ற ஜீப்பில் பெட்ரோல் இல்லாததால் நடுவழியில் நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதி கைலாஷில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பயண வழியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை மீண்டும் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்து வந்தனர்.
இது குறித்து சிதம்பரத்தில் உள்ள உறவினரிடம் யாத்திரிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த தகவல் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து நிலச்சரிவு சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது. முதல் கட்டமாக 15 பேர் இன்று பகல் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பேரும் இன்று(செப்.15) மாலை மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





