கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தன்னை சந்தித்து வாழ்த்து கூறும் பொருட்டு, சென்னைக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று(செப். 29) தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிக்க | துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!
இதையடுத்து உதயநிதிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்னைக்கு நேரடியாக வந்து உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை பயணத்தைத் தவிர்க்குமாறு உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.
எனினும், நம் முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.