பாஜக  300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் ஆனால் தமிழ்நாட்டில்..? - எஸ்.வி.சேகர் பேட்டி

அண்ணாமலை சொல்வது போல், தமிழகத்தில், பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது. ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும் என்று நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
பாஜக  300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் ஆனால் தமிழ்நாட்டில்..? - எஸ்.வி.சேகர் பேட்டி



திருச்சி: அண்ணாமலை சொல்வது போல், தமிழகத்தில், பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது. ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும் என்று நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும் பாஜக நிர்வாகியான எஸ் வி சேகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி வந்த அவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனம் செய்வதற்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடிகர் விஜய் கட்சி தொடங்கியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்து விட்டால், அதன் பின் பெரிய எதிர்காலம் இருக்கும். முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்று விட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகி விடும். அவர் விரும்பியதை தமிழக அரசியலில் செய்ய முடியுமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும். அவருக்கான ரசிகர் மன்ற கட்டமைப்பு பலம். அதை எப்படி அரசியல் கட்டமைப்பாக மாற்றப் போகிறார் என்று தான் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் எடுக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., பெரிய கட்சியில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்து, அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்து போது, மக்கள் பெரிதாக ஏற்று கொண்டு மாபெரும் கட்சியானது. ஒரு எம்.ஜி.ஆர். தான் இருக்க முடியும். 

மக்களவைத் தேர்தலில், பாஜக  300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 3 ஆவது முறையாக மோடி பிரதமராவார். வட இந்தியாவில், ராமர் அவருக்கு அந்த ஆசிர்வாதத்தை கொடுப்பார்.மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்யமாகத்தான் இருக்கும். அவருடைய நடைபயணம் கேலிக்குரியதாக உள்ளது. குழந்தைத் தனமான அரசியல்வாதியான அண்ணாமலைக்கு கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்யம் தான். அதன் ‘முடிவு’ மே மாதத்தில் தெரிந்துவிடும்.

அதிமுகவுடன் கூட்டணி இருக்கக் கூடாது என்று தான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறிவிட்டது. அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்து விடும்.  

பாஜகவின் 3 சதவிகித வாக்கு வளர்ச்சி மே மாதம் தான் தெரியும். அண்ணாமலை பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன்.
அண்ணாமலை சொல்வது போல்,தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. 

ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும். விகிதாச்சார  அடிப்படையில் வாக்குகளை கணக்கிட்டால்,கூட்டணி பலம் தான் தேர்தலில் வெற்றி பெற வைக்கும்.

தேர்தல் காலத்தில், உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அனுதாப அலை ஏற்படும். மற்ற நேரங்களில் அனுதாப அலை வேலை செய்யாது.மோடி அரசின் திட்டங்களை, மக்களிடம் அண்ணாமலை சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போகும் பாதை தவறாகி விட்டது. 

அவர் நடை பயணம் செல்வதால், வரும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறாது.தன்னை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்று நினைத்தால், வேறு ஏதோ கோளாறு என்று அர்த்தம். 

சென்னை மயிலாப்பூரில் ஒரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது, ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல்,ரூ.300 கோடிக்கு வேலை செய்துள்ளேன். 

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். 

நாள்தோறும் வாழ்வாதாரத்துக்காக போராடும் பிராமணர்கள், 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான சமூக நீதி கிடைக்காவிட்டால், அவர்கள் வாக்கை நோட்டாவுக்கு போட்டு விடுவார்கள். 

மோடியின் புகழை உயர்த்த பாடுபடாமல், அண்ணாமலை தன் புகழை உயர்த்திக் கொள்ள பாடுபடுவதால், எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தேர்தலில் தெரியும். 

சிறந்த கொள்கைளோடு ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத பாஜக கட்சியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகளை கத்துக்குட்டி அண்ணாமலை செய்யவில்லை என  எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com