பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை பொதுமக்களின் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையானது தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எக்ஸ் தெரிவித்திருப்பதாவது:
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான அ.சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் ஜன. 4 ஆம் தேதி சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது.
இதையும் படிக்க: மாரத்தான் ஓட்டம்: அடையாறு பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்
விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.