எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க | ஆலங்குளத்தில் காங்கிரஸார் திடீர் சாலை மறியல்
இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து விடுதலையான தமிழக மீனவர்கள் 12 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஓரிரு நாள்களில் தமிழகம் வரவுள்ளனர்.