
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணி மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறைக் கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 4,760 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரப்பட்டது. நிகழாண்டு ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் 1,380 கி.மீ. தொலைவுக்கு ரூ. 26.28 கோடி மதிப்பில் 291 இடங்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே இரு இடங்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
திருவையாறு புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டதால், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. கும்பகோணம் - திருநறையூர் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதேபோல இன்னும் பல கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கண்காணிப்பு பொறியாளர் எம.ஏ. ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.