
திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சிணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சிணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கடந்த வாரம் புகார் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சிணை புகாரில், மருமகன் பல்ராம் சிங் இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மருமகனின் வழக்குரைஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி, விசாரணைக்கு நேரில் ஆஜராக மலும் 10 நாள்கள் அவகாசம் கேட்டு நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்காவுக்கு வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகார் தொடர்பாக விசாரணைக்கு திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு பல்ராம் சிங்குக்கு நெல்லை மகளிர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
ஆனால், இன்று அவர் ஆஜராகவில்லை என்றும், ஆஜராக மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருட்டுக்கடை
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, எந்த விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல், ஒரே ஒரு குண்டு பல்புடன் இயங்கி வருகிறது இருட்டுக்கடை அல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இருட்டுக் கடை அல்வாவின் தாயகம் ராஜஸ்தான்.
1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே தொடங்கியதுதான் இந்த அல்வா கடை. வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.