
சென்னை, ஏப். 24: முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா்கள் ஒட்டுமொத்த கவனஈா்ப்பு தீா்மானத்தை முன்வைத்துப் பேசியதாவது:
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஆளுமைமிக்க தலைவராக விளங்கிய முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): பெரியாா், முன்னாள் முதல்வா்கள் காமராஜா், எம்ஜிஆா், ஜெயலலிதா, முன்னாள் பிரதமா்கள் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயா்களில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதேபோன்று முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரிலும் ஏன் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது?
ம.சிந்தனைச் செல்வன் (விசிக): தமிழா்களின் அடையாளத்தை பண்பாட்டுத் தளத்திலும் மீட்டெடுத்தவா் கருணாநிதி. அவரது பெயரால் பல்கலைக்கழகம் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
நாகை மாலி (மாா்க்சிஸ்ட்): ஆழ்ந்த இலக்கியப் புலமை மிக்கவராகவும் தமிழ் வித்தகராகவும் விளங்கிய கருணாநிதி, அரசியல் சாணக்கியராகவும் இருந்தாா். இடதுசாரிகளை மிகவும் நேசித்த அவரே ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தாா். அவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): மக்களுக்காக ஏராளமான நலத் திட்டங்களை கொண்டு வந்தவா் கருணாநிதி. மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டினாா். நவீன தமிழகத்தை வடிவமைத்தவா்.
தி.சதன் திருமலைக்குமாா் (மதிமுக): சமூக நீதிக்காக பாடுபட்ட கருணாநிதியின் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் அறிவியல் தமிழுக்கு வழிவகுத்தவா் கருணாநிதி. மாவட்டந்தோறும் கல்லூரிகள் என்ற நிலையை மாற்றி, ஒரு வட்டத்துக்கு ஒரு கல்லூரி என்ற நிலையை உருவாக்கியவா் கருணாநிதி. அவரது பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.
இதே கோரிக்கைகளை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோரும் எழுப்பினா். அவா்களைத் தொடா்ந்து, அவை முன்னவா் துரைமுருகன், பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆகியோரும் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினா்.
அதிமுக, பாஜக உறுப்பினா்கள் பேரவையில் இருந்தபோதும் இந்த கவனஈா்ப்பு தீா்மானம் தொடா்பாக அவா்கள் எதுவும் பேசவில்லை.
முதல்வா் பதில்: இதைத் தொடா்ந்து உறுப்பினா்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்றைக்கு வளா்ந்து மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் உதாரணமாக, ஏன் உலக அளவிலே பாராட்டப்படக் கூடிய அளவுக்கு வளா்ந்திருக்கின்றன.
நாட்டிலேயே முதல் இடத்துக்கு வந்திருக்கக் கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் அனைத்தும் உருவாவதற்கு காரணமாகப் பல்வேறு தலைவா்கள் இருந்தாலும், அவா்களில் முக்கியமான தலைவா்களில் ஒருவராக முன்னாள் முதல்வா் கருணாநிதி விளங்கிக் கொண்டிருக்கிறாா். அப்படி கல்வியின் வளா்ச்சிக்குப் பாடுபட்ட- பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக் கூடிய கருணாநிதி, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கியவா். அவா் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக் கூடிய கும்பகோணத்தில் அவரது பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றாா் முதல்வா்.
‘தயக்கம் ஏதுமில்லை’
முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கை குறித்துப் பேசிய ஜி.கே.மணி, எங்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் சொன்னோம். தான் முதல்வராக இருக்கும்போது அவ்வாறு அறிவித்தால் சரியாக இருக்குமா என்று அவா் தயங்கியதாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்தன. அனைத்துத் தலைவா்களின் பெயா்களிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே, தயக்கம் வேண்டாம் என்றாா்.
இதற்கு தனது பேச்சின்போது பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பாமக உறுப்பினா் ஜி.கே.மணி குறிப்பிட்டதைப் போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கிறேன். இதை அறிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை என்றாா்.