ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :28 ஏப்ரல் 2025, 9:43 am

DIN

சென்னை: அரசுப் பணியில் உள்ள மகளிருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில்,

நிர்வாகத்தினுடைய தூண்களாவும், அரசின் கரங்களாவும் விளங்குபவர்கள் நம் அரசு ஊழியர்கள். அகில இந்திய அளவில் நம்முடைய தமிழ்நாடு பலவகையில் முதலிடத்திலேயும் முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் உழைப்பும், சீரிய பங்களிப்பும் இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம். அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப் போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவரையும் இந்த தருணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலேயும், தனிப்பட்ட முறையிலேயும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

தற்போது, அரசு ஊழியர் நலன் கருதி, அவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன் என்று ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்பதாவது அறிவிப்புதான் மகப்பேறு விடுமுறை குறித்த அறிவிப்பு

அதன்படி முதல்வர் அறிவித்ததாவது,

திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடரும் என்று கூறினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.