
தேமுதிக கட்சியின் மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்துக்கு முதல் வெற்றியைக் கொடுத்த கடலூரில் மாநில மாநாட்டை நடத்தவிருப்பதாகவும் பிரேமலதா கூறினார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில், தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில், தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அட்சய திருதியை நல்ல நாளில், கட்சியின் இளைஞரணி செயலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார் பிரேமலதா.
தொடர்ந்து, தேமுதிக மாநில மாநாடு குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிட்டார். அதன்படி, கடலூரில் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், கட்சியின் வளா்ச்சி, எதிா்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் தேமுதிக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.