
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் 1-ம் தாள் நவம்பர் 1 ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் 2-ம் தாள் நவம்பர் 2 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இதுபற்றிய விவரங்களைக் காணலாம்.
ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் 2022-க்குப் பிறகு இப்போதுதான் டெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.