தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா
தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கு என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சா் ராஜா வெளியிட்ட பதிவு:
மின்னணு சாதனங்கள் உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, பேபால், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் செயலாக்கத்துக்கு வரவுள்ளன. கடந்த முறை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, அந்த நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், ரூ.1,937.76 கோடி முதலீடுகள் செய்யப்பட்டு, அதன் வழியாக 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பல புதிய முதலீடுகளுக்கும், விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன என்று தனது பதிவில் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.