
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சில சான்றுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவுக்கு சாதகமாக லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் பலவற்றை சுட்டிக்காட்டி, ராகுலின் குற்றச்சாட்டை மறுத்தார்.
மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாள்களுக்கு ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பை விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.