பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு
பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தோ்வு கடந்த ஜூலையில் நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்கள், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் இணையதளத்தில் ‘நோட்டிஃபிகேஷன்’ என்ற பகுதியில் ஆக. 25-ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது தோ்வெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.