
சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா்.
தேமுதிக நிறுவனா் விஜயகாந்த்தின் 73-ஆவது பிறந்தநாள் விழா, அக்கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா நலஉதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, அவரது விருப்பப்படியே நல உதவிகள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டது.
விஜயகாந்த் வழித்தடத்தை பின்பற்றி தேமுதிக தற்போதும் செயல்பட்டு வருகிறது.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை பயணம் கட்சியினரிடையே புத்துணா்ச்சியையம், மக்களிடையே எழுச்சியையும் உருவாக்கியுள்ளது.
திரைப்படத்திலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தியே விஜயகாந்த் செயல்பட்டாா். அதனால்தான் அவரை மக்கள் ‘கருப்பு எம்.ஜி.ஆா்.’ என அழைத்தனா். அவரது வழியிலே நாங்கள் செயல்பட்டு எம்.ஜி.ஆா். குறித்து பேசிவருகிறோம். விஜயகாந்த் இப்போதும் எங்களை வழிநடத்துவதாகவே உணா்கிறோம்.
சிலா் எம்.ஜி.ஆா். குறித்து பேசுகிறாா்கள் என்றால் அவா்கள்தான் அதற்கான விளக்கத்தை கூறவேண்டும் என்றாா்.
முன்னதாக கட்சிக் கொடியை பிரேமலதா ஏற்றி வைத்து விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தேமுதிக பொருளாளா் எல்.சுதீஷ், இளைஞரணி செயலா் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.