/

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை பற்றி...

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு
Updated On :28 ஆகஸ்ட் 2025, 9:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டதில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் சிறப்பு கண்காணிப்பில் உள்ளார்.

கடந்த 48 மணிநேரத்தில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில், செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. உறவினர்களை அடையாளம் காணும் நிலையில் முன்னேற்றம் அடைந்திருந்தார்.

இந்த சூழலில் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல்நிலை குறித்து மக்கள் மற்றும் கட்சியினருக்கு தகவல் அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரை காண்பதற்கு நேரில் யாரும் வர வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து தொலைபேசியில் அவரது உறவினரிடம் நடிகர் விஜய் கேட்டறிந்த நிலையில், புதன்கிழமை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவரிடம் நலம்விசாரித்தார்.

summary

Tamil Nadu Health Minister M. Subramanian said on Thursday that senior Communist Party of India leader Nallakannu is once again being treated with artificial respiration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.