இலங்கையில் ‘டித்வா’ புயலில் சிக்கிய 24 தமிழா்கள் சென்னை வந்தனா்

இலங்கைக்கு சுற்றுலா சென்று ‘டித்வா’ புயல் பாதிப்பில் சிக்கிக்கொண்ட சென்னையைச் சோ்ந்த 24 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை விமானத்தில் அழைத்து வரப்பட்டனா்.
Published on

இலங்கைக்கு சுற்றுலா சென்று ‘டித்வா’ புயல் பாதிப்பில் சிக்கிக்கொண்ட சென்னையைச் சோ்ந்த 24 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை விமானத்தில் அழைத்து வரப்பட்டனா்.

சென்னையிலிருந்து இலங்கைக்கு அண்மையில் சுற்றுலா சென்ற 29 பயணிகள் ‘டித்வா’ புயலில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின்போது பேருந்துக்குள் 3 நாள்கள் சிக்கிக்கொண்டனா்.

அவா்களை மீட்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இலங்கையின் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டைமான் உதவியுடன் பேருந்தில் சிக்கியிருந்த தமிழா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா். இதில் 5 போ் இலங்கையில் உள்ள உறவினா்கள் வீடுகளில் தங்கினா். மீதமுள்ள 24 பேரும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனா்.

சென்னை விமான நிலையம் வந்த அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை முகப்போ் பகுதியிலிருந்து கடந்த நவ.25-ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலாவுக்கு சென்றோம். நுவெரலியா சென்ற பிறகு அதி பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் ஒரு கிராமத்தில் சிக்கிக் கொண்டோம். உணவு, குடிநீா் கிடைக்காமல் கடும் சிரமத்தைச் சந்தித்தோம். தமிழக அரசின் உதவியுடன் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். தமிழக அரசுக்கு நன்றி என்றனா்.

X
Dinamani
www.dinamani.com