

அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அவர் பேசியதாவது, தொடர்ந்து மூன்று நாள் தொடர் பயணம். நேற்று முந்தினம் விருதுநகரில் ஆரம்பித்து, அதன் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்து, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி வந்து, செஞ்சியிலிருந்து நேற்று இங்கு வந்து, இன்றைக்கு முழுவதும் விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள். இன்று காலையில் கூட ஒரு அரசு நிகழ்ச்சி முடித்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறேன்.
இன்றைக்கு எஸ்.ஐ.ஆர். என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஒன்றிய பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையம் மூலமாக நம் வாக்குரிமையை பறிக்கிறார்கள். இந்த எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் மூலமாக அவர்களுடைய முழு நோக்கமே பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கக்கூடிய, பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள், மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை எப்படியாவது தடுத்து பறித்துவிட வேண்டும் என்பதுதான் எஸ்.ஐ.ஆர் திட்டத்தின் நோக்கமாகும்.
எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அ.தி.மு.க-வில் இருக்கிறாரா? இல்லை, பாஜக-வில் இருக்கிறாரா, இல்லை ஆர்.எஸ்.எஸ்.காரராவே மாறிட்டாரா என்று இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு அந்தக் கட்சியில் யாருமே இல்லை. அந்த நிலைமை இன்றைக்கு அ.தி.மு.க.வுக்கு உருவாகி இருக்கிறது.
விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விட்டு நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது நிலம் ஒருவருடையாதாக இருக்கும், ஆனால் விவசாயம் இன்னொருத்தர் பார்ப்பார். அதுமாதிரி இன்றைக்கு அ.தி.மு.க.-வை அமித்ஷா குத்தகைக்கு எடுத்து, அ.தி.மு.க. அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, அறிக்கை எல்லாம் பார்த்தீர்கள் என்றால் அது அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வந்ததா, இல்லை பாஜக அலுவலகத்தில் இருந்து வந்ததா என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டிதான் இன்றைக்கு நம் தலைவர் தமிழ்நாட்டு அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு திருப்பரங்குன்றம், மதுரையில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, எப்படியாவது உள்ளே நுழைந்துவிட முடியாதா என்று பல வழிகளில் அவர்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் நாம் அத்தனை பேரும் தெளிவாக ஒரு பதில் சொல்லியாக வேண்டும். அவர்களின் முயற்சி தமிழ்நாட்டில் பலனளிக்காது. ஏனென்றால் இங்கே நடந்து கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கிடையாது. இங்கே நடந்துக் கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சுயமரியாதை ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. நம் தலைவர் இன்றைக்கு தமிழ்நாட்டின் நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.