

மதுரை நாளை(டிச.07) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 7.12.2025 அன்று மாமதுரை திருநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனையொட்டி, மதுரை மாநகர் மாபெரும் அளவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மதுரை மாநகரில் நாளை (7.12.2025) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு வளர்கிறது” எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் வாயிலாக 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.
மேலும், ரூ.8,668 கோடியில் 96 இலட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்குகிறார். மேலும் ரூ. 3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார்.
இவை தவிர, முதல்வர் மதுரையில் 2.4 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.216 கோடி மதிப்பீட்டில் கட்டி 15.7.2023 அன்று திறந்து வைத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உலகப் புகழ்ப்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் 5 தளங்களுடன் கூடிய மாபெரும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி 24. 1. 2024 அன்று முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், 2021 க்குப்பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.
இவைகளை எல்லாம் நினைவில் கொண்டு, முதல்வர் கூறியுள்ளபடி, இன்று மதுரைக்குத் தேவைப்படுவது வளர்ச்சி மட்டும்தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.