

டெண்டர் முறைகேடு மற்றும் வேலைக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு நகராட்சி நிருவாகத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை, தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 252 பக்க அறிக்கையையும் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கடிதத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
"திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் தற்போது மலைபோல ஆதாரங்கள் இருப்பதால் தமிழக அரசு இதனை தவிர்க்க முடியாது.
அமைச்சர் கே.என். நேருவின் கீழ் நகராட்சி நிருவாகத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு ரூ. 888 கோடி ஊழலைத் தொடர்ந்து தற்போது ரூ. 1,020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் சமர்ப்பித்துள்ளது.
அமைச்சர் நேரு தனது உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்த மிகப்பெரிய கொள்ளைக்குச் சமம். வாட்ஸ்ஆப் சாட், லஞ்ச கணக்கீட்டு பட்டியல், ஹவாலா மூலம் பணமோசடி பற்றிய விவரங்களை அமலாக்கத் துறை வழங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் துறை மட்டுமே. அமைச்சர் கே.என். நேரு விவகாரத்தில் இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் குறித்து அவர் மெது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.