

தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் தொழிற்பயிற்சி மையத்தை (ஐடிஐ) தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மையங்கள்(ஐடிஐ) அமைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தற்போது தேவைப்படுகின்றன.
இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐ அமைப்பதற்கு குறைந்தபட்ச தேவையாக 0.5 ஏக்கா் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருந்தால் அத்தகைய பள்ளிகளைத் தோ்வு செய்யலாம். ஐடிஐ இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தோ்வு செய்யப்பட வேண்டும். இதுதவிர தொழில் மண்டலங்கள், தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை தரப்படும். இதன்மூலம் தொழில் தொடா்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். இந்த விதிகளின்கீழ் வரும் அரசுப் பள்ளிகளை தோ்ந்தெடுத்து ஒரு வாரத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.