

புதுச்சேரி: புதுவை மாநிலம் ரேஷன் கடையே இல்லாத மாநிலம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். ஆனால், புதுவையில் ரேஷன் கடைகள் மூலமாக அனைவருக்கும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தவெக விஜய் பேச்சை வன்மையாக கண்டித்துள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். பொய்யான தகவல்களை கூறி அவர் பரப்புரை மேற்கொண்டுள்ளார் என்றும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தவெக பிரசாரத்தை புதுவை மாநில காவல்துறை சிறப்பான முறையில் கையாண்டு எந்த அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் பாதுகாத்தனர். காவல்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.
கடந்த சில நாள்களாக போலி மருந்துகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலி மருந்து தொழிற்சாலை தொடர்பாக 2017-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, இந்த கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு லைசன்ஸ் கொடுத்துள்ளார். எங்களது ஆட்சியில் அதை கண்டுபிடித்துள்ளோம்.
போலி மருந்து விவகார குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி சென்றுள்ளார். அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மாநில அந்தஸ்து தொடர்பாக விஜய் பேசியுள்ளார். இது இப்போது நடந்த பிரச்னை இல்லை காலம் காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்து நிலவி வரும் பிரச்னை.
புதுவை மாநிலம் ரேஷன் கடையே இல்லாத மாநிலம் என கூறியுள்ளார். ரேஷன் கடைகள் மூலமாக அனைவருக்கும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடை இல்லை என்பது போல பொய்யான பிரசாரம் செய்துள்ளார். அதேபோல் ஊழல் அமைச்சரை பதவி நீக்கம் செய்ததாக கூறியுள்ளார். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சுழற்சி முறையில் தான் அவர் ராஜினாமா செய்தார். ஊழலால் இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன். இதுபோல் தவறான தகவல்களை அரசியல் காழ்புணர்ச்சியோடு எங்கள் மீது, மத்திய அரசின் மீது விமர்சிப்பதை கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் விஜய்க்கு பேச வாய்ப்பில்லை என்பதால் கரூர் சம்பவத்திற்கு பிறகு ஏதாவது பேச வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசின் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறிச் சென்றுள்ளார். அவர் பேசிய ஸ்கிரிப்டை எழுதிக் கொடுத்தவர்கள் தவறான தகவலை கொடுத்துள்ளனர். ஒரு தலைவர் என்பது உண்மை தன்மையை அறிந்து பேச வேண்டும். அதை விடுத்து மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை பேசியுள்ளார். இது அவரின் அரசியல் முதிர்ச்சின்மையை காட்டுகின்றது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.