

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் திறம்படக் கையாண்ட ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங்கை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஸ் கொடுக்கப்பட்ட 5,000 நபர்களை மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர்.
இந்த கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த புதுவை எஸ்எஸ்பி இஷா சிங், அரங்கின் நுழைவு வாயிலிலேயே நின்று மொத்த கூட்டத்தையும் சிறப்பாக கையாண்டார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற தவெக பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை கடிந்துகொண்ட காட்சி மூலம் இணையத்திலும் வைரலாகப் பரவினார்.
இருப்பினும், பெரும் விபத்துக்குப் பிறகு நடைபெற்ற புதுவை கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் இஷா சிங் பெற்றார்.
இந்த நிலையில், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இஷா சிங்கை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.