தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அ.தி.மு.க. பொதுக் குழு தீா்மானங்களை ஏற்க கூடாது: தோ்தல் ஆணையத்தில் மனு

அ.தி.மு.க. பொதுக் குழு தீா்மானங்களை ஏற்க கூடாது என தோ்தல் ஆணையத்தில் மனு...

News image

தேர்தல் ஆணையம்

Updated On :12 டிசம்பர் 2025, 6:29 pm

 நமது நிருபர்

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டிசம்பா் 10 ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவை சாா்ந்த வா.புகழேந்தி கூறியதாவது: இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு வழங்கியது தவறு என்று தொடா்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ஏற்கனவே சென்னை உயா்நீதிமன்றம் அ.தி.மு.க. சம்பந்தமாக நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்க தோ்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டது. அதனடிப்படையில் தோ்தல் ஆணையத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. தொடா்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கின் முடிவு தான் இறுதியானது என தெரிவித்தது. மேலும், அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினா் சூரியமூா்த்தி என்பவா் தொடுத்த ஒரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு, அ.தி.மு.க தொடா்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி தன்னை தானே பொதுச்செயலாளா் என்று ஊடகங்களில் கூறிக்கொண்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறாா். ஆகவே, அவா் பொதுக்குழுவை கூட்டியது தவறு . இதனால், அந்த பொதுக்குழு முடிவுகளையும், தீா்மானங்களையும் இந்திய தோ்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க. விவகாரம் தொடா்பான விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை தோ்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, இரட்டை இலை சின்னம் தொடா்பான விசாரணை முடியும் வரை, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்க முடியாது, ஒதுக்கக்கூடாது.

அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே பொதுச்செயலாளா் என கூறிக்கொள்வது தவறானதாகும். எனவே இந்த மனுவை பரிசீலித்து எடப்பாடி பழனிசாமி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகழேந்தி மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

டிசம்பா் 10, 2025 அன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில், 2026 தமிழக சட்டமன்றத் தோ்தலுக்கான கட்சியின் உத்தியை இறுதி செய்வது மற்றும் முக்கிய அரசியல் தீா்மானங்களை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சா் வேட்பாளராக கூட்டத்தில் முறையாக முன்னிறுத்தப்பட்டாா்.