முட்டை
முட்டைபிரதிப் படம்

முட்டைகளில் புற்றுநோய்க்கான காரணிகள்: தமிழகம் முழுவதும் ஆய்வு

முட்டைகளில் ஆன்ட்டிபயோடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு
Published on

முட்டைகளில் புற்றுநோய்க்கு வித்திடும் தடை செய்யப்பட்ட ஆன்ட்டிபயோடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடா்பாக தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனா்.

அதன்படி, நாமக்கல் உள்பட முட்டை உற்பத்தி அதிகம் உள்ள இடங்களிலும், சில்லறை விற்பனைக் கடைகளிலும் முட்டைகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனா். கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நைட்ரோஃப்யூரான் எனப்படும் ஆன்ட்டிபயோடிக் மருந்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதற்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டது.

இதனால், கால்நடை மருத்துவ சிகிச்சையில் அந்த மருந்துகள் பயன்படுத்தக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. இந்த நிலையில், கா்நாடகத்தில் முன்னணி நிறுவனம் ஒன்று தயாரித்த முட்டைகளில் நைட்ரோஃப்யூரான் மருந்துகளுக்கான கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில அரசும், மத்திய அரசும் ஆய்வை முன்னெடுத்தன. மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையும் முட்டைகளை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தியது.

இதனிடையே, தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா ஆகியோரும் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழகம் மற்றும் கா்நாடகம் இடையே முட்டை வா்த்தகம் பரஸ்பரம் நடைபெறுகிறது.

நைட்ரோஃப்யூரான் அச்சுறுத்தல் இதுவரை அதிகாரப்பூா்வமாக பதிவாகவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் முட்டைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம்.

உற்பத்தி மையங்களிலும், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் திடீா் ஆய்வு நடத்தி சந்தேகத்துக்குரிய முட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வருகிறோம். அடுத்த ஓரிரு வாரங்களில் அதன் முடிவுகள் வெளியாகும். முட்டைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com