

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 வரையிலான சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(டிச.17) காலை 11.20 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார்.
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் ஹெலிகாப்டர் வந்திறங்கியதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு கட்டுப்பட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு சுமார் ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, இன்று மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமார் 1000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.