

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு 2,74,274 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இது குறித்து மேலும் கூறியது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆலந்தூர் தொகுதியில் 132,059 பேர், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் 54718 பேர், உத்தரமேரூரில் 37,515 பேர், காஞ்சிபுரத்தில் 49,982 பேர் உட்பட மொத்தம் 4 தொகுதிகளையும் சேர்த்து 2,74,274 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து தற்போது மொத்த வாக்காளர்களாக 11,26,924 பேர் உள்ளனர். வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை 1,401 வாக்குச்சாவடிகளாக இருந்தது தற்போது 144 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 1,545 வாக்குச் சாவடிகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் இணையம் வாயிலாகவோ அல்லது நேரில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாகவோ தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலை வெளியிட்ட போது 4 பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.