

செவிலியர்கள் போராட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை முழுவதும் கடைப்பிடித்தது. சோழிங்கநல்லூரில் மட்டும் 2.50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் 1.86 லட்சம் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 12 ஆயிரம் வாக்குகள் ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவடைந்து சென்று விட்டார்கள்.
போராட்டம் நடைபெற்று வருகிறது என நீங்கள் கேட்பது உங்களது ஆசையாக இருக்கலாம். நேற்று அவர்களிடம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கை என்பது ஒரு சில மட்டுமே. அவற்றில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என சொல்லி இருக்கிறோம். இன்னொரு கோரிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. காலிப் பணியிடங்களே இல்லாத நிலைமை இப்போது இருக்கிறது.
169 காலிப் பணியிடங்கள் மட்டுமே செவிலியர் பணிகளுக்கு உள்ளது. அந்தப் பணியிடங்களை இரண்டு நாள்களில் நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டன. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வந்த பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என சொல்கிறார்கள். 3,614 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் மட்டும் 1,200 புதிதாக உருவாக்கி உள்ளோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் ஒப்பந்த செவிலியர் பணியிடம் என உருவாக்கப்பட்டது. இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அறிக்கை விடுவது ஒரு மாதிரி உள்ளது. இந்த பிரச்னைக்கு காரணமே அதிமுகதான். 3,783 ஒப்பந்த செவிலியர்கள் இந்த அரசு வந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை இன்னும் கூடுதல் காலிப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.