

திருப்பரங்குன்றத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பொதுமக்கள் உள்பட 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணியை கடந்தும் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் விடுவிக்காததால் அவர்களைப் பார்க்க வந்த பாஜகவினர் போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் - மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீஸார் இரவு 11 மணிக்கு மேல் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாக போராட்டம் நடத்தியதாக பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், மாரி சக்கரவர்த்தி உள்பட 45 பேர் மீது திருநகர் காவல் நிலையத்திலும், திருப்பரங்குன்றம் மலை மேல் இஸ்லாமியர்கள் கொடியேற்ற அனுமதியளித்ததைக் கண்டித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனியாண்டவர் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் 17 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.