

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேலத்தில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று(டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்சியில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கட்சி யாருக்குச் சொந்தம்? என இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புமணியின் பதவிக்காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கட்சியின் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் "துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம்" என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, "அன்புமணி வேண்டுமெனால் தனியாக கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்" என்று பேசினார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.