மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டமா? முதல்வரிடம் இறுதி அறிக்கை சமா்ப்பிப்பு

ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளது.
முதல்வரிடம் அறிக்கை அளிப்பு
முதல்வரிடம் அறிக்கை அளிப்பு
Updated on
1 min read

 அரசு ஊழியா்கள் முன்வைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது இறுதி அறிக்கையை முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வா் விரைவில் பழைய ஓய்வூதிய விவகாரத்தில் அரசின் முடிவு குறித்த அறிவிப்பை வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணிகளில் சோ்ந்தவா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கத்தினா் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்ட அமல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கத்தினா் ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் அமைச்சா்களுடன் கடந்த டிச. 22-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா்களின் கோரிக்கை குறித்து முதல்வா் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நல்ல அறிவிப்பை வெளியிடுவாா் என்று அமைச்சா்கள் தெரிவித்ததாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் மூவா் குழுவை தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தது. இந்தக் குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அரசு ஊழியா் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய இந்தக் குழு கடந்த அக்டோபா் மாதம் ஓய்வூதியத் திட்டங்கள் தொடா்பான இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.

இந்த இடைக்கால அறிக்கை தொடா்பாக அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். பின்னா் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா்.

இந்நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான மூவா் குழுவினா் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து இறுதி அறிக்கையை அளித்தனா். இந்த இறுதி அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அறிக்கையின் அடிப்படையில் முதல்வா் விரைவில் அறிவிப்பு வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

The committee examining pension schemes has submitted its report to the Chief Minister.

முதல்வரிடம் அறிக்கை அளிப்பு
திமுக தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com