
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேற்று(திங்கள்) ஆலோசனை நடத்தினார்.
விசிகவில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில்தான், விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக இன்று தவெக பொதுச் செயலர் ஆனந்த், தவெக தேர்தல் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பாஜக, ஆம் ஆத்மி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நேரங்களில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பானது தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.