
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 20 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.
கடந்த ஒராண்டிற்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 இந்திய மீனவர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுக்கு மத்தியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்களும் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அங்கு தற்காலிக குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் கொழும்புவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக இன்று (ஜன.01) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
அங்கு பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளுக்கு பின்னர் வெளியே வந்த அவர்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று அவரவர் சொந்த ஊருக்கு தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநூரா திஸ்ஸநாயக்கேவிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவதற்கு இருநாடும் இணைந்து தீர்வு காண வேண்டும் என எடுத்துரைத்திருந்தார்.
தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 504 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவ அமைப்புகள் தொடர்ந்து மாபெரும் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.