
ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த 9 ஐயப்ப பக்தர்களில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் கடந்த டிச.23 அன்று இரவு 1.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 ஐயப்ப பக்தர்களும் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர்.
ஆனால், கடந்த டிச. 26 அன்று நிஜலிங்கப்பா பேரூர் (வயது-58), சஞ்சய் சவ்டட்டி (17) மற்றும் ராஜூ முகேரி (16) மற்றும் லிங்கராஜ் பிர்நூர் (21) ஆகியோரும், டிச.29 அன்று ஷங்கர் சவுகான் (30) மற்றும் மஞ்சுநாத் வாக்மொடே (17) ஆகியோரும் கடந்த டிச.30 அன்று தேஜஸ் சதாரே (26) என்பவர் என மொத்தம் 7 பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியானார்கள்.
இந்நிலையில், நேற்று (டிச.31) பிரகாஷ் பார்கர் என்பவர் பலியாகியுள்ளார். இதனால் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
உடலில் 40 சதவிகித தீக்காயங்களுடன் தற்போது சிகிச்சைப் பெற்று வரும் பிரகாஷின் மகன் வினாயக் பார்கரின் உடல் நிலை சற்றுத் தேறி வருவதாகக் கூறப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களாக 9 பேரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு சாய் நகரின் சிவன் கோயிலில் டிச.23 இரவு தங்கியிருந்தனர். அன்றிரவு தூங்கிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களில் ஒருவர் தனது தூக்கத்தில் அங்கிருக்கும் சிலிண்டரை எட்டி உதைத்ததில் அதன் ரெகுலேட்டர் திறந்து வாயு வெளியானதில் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பலியான ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.