
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் இன்று(சனிக்கிழமை) காலை திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு பேர் காயமுற்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் சிவகாசி ஆலமரத்தப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50- க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை பணியைத் துவங்கினர். அப்போது உராய்வு காரணமாக ரசாயன அறையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர்.
இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், குருந்தமடத்தைச் சேர்ந்த காமராஜ், வேல்முருகன், வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே இடுபாடுகளில் சிக்கி பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
வச்சக்காரப்பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேனேஜர் தாஸ் பிரகாஷ், பேர்மென் சதீஸ்குமார் ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | பட்டாசு ஆலை விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.