
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் 11ஆவது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தொடர்ந்து 915 நாள்களாக தொடர் போராட்டத்திலும் பல்வேறு விதங்களில் போராட்டங்களை முன்னெடுத்து திட்டத்தினை கைவிடக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்காக 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் நிலை எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு நிலம் எடுக்க முதல் கட்ட ஆய்வு மற்றும் கணெக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு அடுத்த மாதம் முதல் இழப்பீட்டு தொகை வழங்கும் பணி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 76 ஆவது குடியரசு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குடியரசு நாள் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 11 வது முறையாக பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தினை கைவிடக் கோரி சிறப்பு தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் இத் திட்டத்தினை கைவிடக் கோரி மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகள் நீர்நிலைகள் மற்றும் விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.