கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...
K. M. Kader Mohideen to receive Thagaisal Thamizhar Award this year
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்.X
Published on
Updated on
2 min read

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தகைசால் தமிழர் விருது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.

அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் இந்த விருதினை சங்கரய்யா,
ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (4.7.2025) நடைபெற்றது.  

இதில் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. 

மேலும், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர். தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளராகவும் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 

கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து  தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உள்பட ஆறு நூல்களை   எழுதியவர். மேலும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,  திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர், கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

National president of the Indian Union Muslim League K. M. Kader Mohideen to receive Thagaisal Thamizhar Award this year by tamilnadu govt.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com